Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3405
திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் 

சிதம்பரம் எனும்பெருங் கோயில்
உருவளர் மறையும் ஆகமக் கலையும் 

உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி 

வண்ணங்கண் டுளங்களித் திடவும்
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி 

காணவும் இச்சைகாண் எந்தாய்
பாடல் எண் :3527
திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் 

செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால் 

உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று 

காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்
பாடல் எண் :3915
திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும் 

தெய்வமே மெய்ப்பொருட் சிவமே 
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே 

ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே 
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே 

உவந்தர சளிக்கின்ற அரசே 
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே
பாடல் எண் :4247
திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே 
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே 
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே 
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.